

புதுடெல்லி
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானில் ஆண்கள், பெண்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.
இதனால், மேற்காசியாவில் நீண்டகாலத்திற்கு மோதல் போக்கு அதிகரித்து காணப்படுகிறது. வான், கடல் வழி பயணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், புதுடெல்லியில் இருந்து இஸ்ரேலுக்கு செல்லும் விமானங்கள் மே 31 வரை ரத்து செய்யப்படுகின்றன என்று ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்து உள்ளது.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் வழியேயான சேவையை பல முன்னணி விமான நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன. எல் அல், இஸ்ரோஏர், ஆர்கியா மற்றும் ஏர் ஹைபா போன்ற இஸ்ரேல் விமான நிறுவனங்களே கடுமையான கட்டுப்பாடுகளுடன் சேவையை தொடர்ந்து வருகின்றன.
இதனால், இஸ்ரேலில் வசிக்க கூடிய 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. தனிப்பட்ட அல்லது தொழில் முறை காரணங்களுக்காக இந்தியாவுக்கு வர விரும்பும் அல்லது போர் பதற்ற சூழலில், இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் நபர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
அப்படி இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்கள், ஜோர்டான் அல்லது எகிப்து நாடுகளின் நில எல்லை வழியே அந்நாடுகளுக்குள் சென்ற பின்னர்தான் வெளியேற வேண்டும். எனினும், டெல் அவிவ் நகரில் உள்ள இந்திய தூதரகம் அவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறது.