இந்தோனேசியா: ஏர் இந்தியா விமானி மாரடைப்பால் உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்

விமானியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்தோனேசியா: ஏர் இந்தியா விமானி மாரடைப்பால் உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்
Published on

ஜகார்தா,

தலைநகர் டெல்லியில் இருந்து நேற்று இந்தோனேசியாவின் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான பாலிக்கு ஏர் இந்தியா விமானம் சென்றது. பாலியில் விமானம் தரையிறங்கியப்பின் விமானிகள், விமான ஊழியர்கள் ஓய்வு எடுக்க பாலியில் ஓட்டல் அறைகள் ஒதுக்கப்பட்டன. ஓய்வுக்குப்பின் பாலியில் இருந்து புறப்படும் அடுத்த ஏர் இந்தியா விமானத்தில் விமானி மற்றும் விமான ஊழியர்கள் பணியாற்ற இருந்தனர்.

இந்நிலையில், பாலியில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்த ஏர் இந்தியா விமானிக்கு (வயது 40) இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் விமானியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாரடைப்பு ஏற்பட்டு விமானி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

மாரடைப்பால் உயிரிழந்த ஏர் இந்தியா விமானியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. அதேவேளை உயிரிழந்த விமானியின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசுடன் இணைந்து ஏர் இந்தியா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com