

நியூயார்க்
அமெரிக்காவில் கோடை காலத்தில் ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளிலும் திருவிழா நிகழ்ச்சிகள் நடக்கும். திருவிழாக்களை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் திரண்டு வருவது வழக்கம். ஒஹியோ மாகாணத்தில் தொலிடோ நகரில் இதுபோன்று, இசை நிகழ்ச்சியுடன் கூடிய திருவிழா ஒன்று நடத்தப்பட்டது.
இதற்காக உணவு விற்பனை செய்யும் கடைகள், ஷாப்பிங் செய்வதற்கான கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு இருந்தபோது, திருவிழா நடந்த பகுதிக்கு அருகே திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது.
சத்தம் கேட்டதும் திருவிழாவுக் வந்திருந்தவர்களில் பலர் அலறியடித்து, பாதுகாப்பு தேடி ஓடினர். எனினும், இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்த 12 பேரில் 2 பேர் தீவிர சிகிச்சை பெறும் நிலையில் உள்ளனர்.
இதனை தொலிடோ நகர காவல் துறையின் துணை தலைவர் ஜோ ஹெப்பர்மேன் உறுதிப்படுத்தி உள்ளார். 2 பேர் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது என்றார். இந்த சம்பவம் தொடர்பாக ஒஹியோ மாகாண கவர்னர் மைக் டிவைன் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.