சீன ரோபோக்களுக்கு அமெரிக்கா அதிரடி தடை!

சீன நிறுவனங்களின் உரிமைகளை பாதுகாக்க சீனா தகுந்த பதில்டி கொடுக்கும்," என ஆவேசமாக கூறியுள்ளார்.
சீன ரோபோக்கள்
Published on

வாஷிங்டன்,

தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என்று கூறி, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மனித உருவ ரோபோக்களுக்கு அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.

அமெரிக்கா தடை

உலகளவில் தொழில்நுட்ப ஓட்டப்பந்தயத்தில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பலப்பரீட்சை நடந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் கூட்டரசு தொடர்பு ஆணையம் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் மனித உருவ ரோபோக்கள், ரோபோ நாய்கள் மற்றும் பவர் இன்வெர்ட்டர்கள் போன்ற அதிநவீன சாதனங்களை அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்ய முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உளவு பார்க்கிறதா சீனா?

அமெரிக்காவின் இந்த அதிரடி தடைக்கு பின்னால் ஒரு பகீர் பின்னணி உள்ளது. இந்த ரோபோக்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மற்றும் இன்டர்நெட் வசதிகள் மூலம், அமெரிக்காவின் ரகசியங்களை சீனா உளவு பார்க்க கூடும் என அமெரிக்க உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. மேலும், ஹேக்கர்கள் மூலம் இந்த ரோபோக்களை இயக்கி அமெரிக்காவின் மின்சார விநியோகத்தை முடக்கவும் சதி நடக்கலாம் என அமெரிக்கா அஞ்சுகிறது.

சீனாவுக்கு மரண அடி

உலக அளவில் ரோபோ தயாரிப்பில் சீனா தான் 'நம்பர்-1' இடத்தில் உள்ளது. உலக சந்தையில் சுமார் 85 சதவீத பங்குகளை சீனா மட்டுமே வைத்துள்ளது. சீனாவின் யுனிட்ரீ, ஏஜிபாட் போன்ற நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் ரோபோக்களை தயாரித்து குவித்து வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த தடை சீனாவுக்கு விழுந்த மரண அடியாக பார்க்கப்படுகிறது.

சீனா ஆவேசம்

அமெரிக்காவின் இந்த தடை உத்தரவுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், "அமெரிக்கா அரசியல் லாபத்திற்காக தேசிய பாதுகாப்பு என்ற காரணத்தை தேவையின்றி கையில் எடுக்கிறது. சீன நிறுவனங்களின் உரிமைகளை பாதுகாக்க சீனா தகுந்த பதில்டி கொடுக்கும்," என ஆவேசமாக கூறியுள்ளார். இதனால் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் மேலும் முற்றியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com