அமெரிக்காவில் சோகம்: கடலுக்கு அடியில் காதலை சொன்னவர் நீரில் மூழ்கி பலி

அமெரிக்காவில் கடலுக்கு அடியில் காதலை சொன்னவர் நீரில் மூழ்கி பலியானார்.
அமெரிக்காவில் சோகம்: கடலுக்கு அடியில் காதலை சொன்னவர் நீரில் மூழ்கி பலி
Published on

டோடோமா,

அமெரிக்காவின் லூசியானா மாகாணம் பேடன் ரூஜ் நகரை சேர்ந்தவர் ஸ்டீவன் வெபர். இவரது காதலி கெனிஷா ஆன்டோயினி.

இவர்கள் இருவரும் தான்சானியா நாட்டில் உள்ள பெம்பா தீவுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு அவர்கள் கடலில் நீருக்கு அடியில் 32 அடி ஆழத்தில் உள்ள மாண்டா எனப்படும் விடுதியில் தங்கினர். அப்போது ஸ்டீவன் வெபர், தனது காதலி கெனிஷா ஆன்டோயினியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா என்பதை கவித்துவமாக கேட்க விரும்பினார்.

இதற்காக தண்ணீருக்குள் இறங்கிய ஸ்டீவன் வெபர் தான் கைப்பட எழுதிய ஒரு காதல் கடிதத்தையும், திருமண மோதிரத்தையும் கண்ணாடி வழியாக விடுதிக்குள் இருந்த தனது காதலியிடம் காட்டினார்.

அந்த கடிதத்தில் அவர் உன்னைப் பற்றி நான் விரும்பும் அனைத்தையும் உன்னிடம் சொல்லும் அளவுக்கு என்னால் மூச்சு விட முடியாது. ஆனால் நான் உன்னைப் பற்றி எல்லாம் எழுதி இருக்கிறேன், ஒவ்வொரு நாளும் நான் அதிகமாக நேசிக்கிறேன் என எழுதியிருந்தார்.

தனக்காக தண்ணீருக்கு அடியில் காதலர் செய்யும் கவித்துவ செயல்களை கெனிஷா ஆன்டோயினி உணர்ச்சி பெருக்குடனும், ஆனந்த கண்ணீருடனும் பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக ஸ்டீவன் வெபர் தண்ணீரில் மூழ்கினார். விடுதி ஊழியர்கள் அவரை காப்பாற்றுவதற்காக உடனடியாக தண்ணீருக்குள் இறங்கினர். ஆனால் அதற்குள் ஸ்டீவன் வெபர் மூச்சு திணறி இறந்துவிட்டார்.

இந்த தகவலை புகைப்படங்களுடன் பேஸ்புக்கில் பதிவிட்ட கெனிஷா ஆன்டோயினி தன் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான ஒரு நாள் துயரத்தில் முடிந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com