

கராச்சி,
பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு துறை மந்திரி கவாஜா ஆசிப் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறும்போது, தென்கிழக்கு ஆசிய நாடான பாகிஸ்தானை தன்னுடைய நலனிற்காக அமெரிக்கா பயன்படுத்தி கொண்டது. அதன் வேலை முடிந்ததும், கழிவறை காகிதம்போல் தூக்கி வீசி விட்டது என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
பாகிஸ்தான் 2 ஆப்கானிய போர்களில் பங்கேற்றது பெரியதொரு தவறு என அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தானில் இன்று காணப்படும் பயங்கரவாதம் ஆனது, கடந்த காலங்களில் செய்த தவறுகளால் ஏற்பட்டவை என கூறினார். அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் அந்நாட்டுடன் உறவு முற்றிலும் சீர்குலைந்து விட்டது என்றார்.
2 முன்னாள் ராணுவ சர்வாதிகாரிகள் இஸ்லாமுக்காக அல்லாமல், ஆற்றல் படைத்த நாட்டை திருப்திப்படுத்த ஆப்கானிஸ்தான் போரில் பங்கேற்றனர். அந்த சர்வாதிகாரிகள் (ஜியா-உல்-ஹக் மற்றும் முஷாரப்) செய்த தவறுகளால் பயங்கரவாதம் நம்மை தாக்கி விட்டது. நம்முடைய வரலாற்றை நாம் மறுக்கிறோம். நம்முடைய தவறுகளை ஏற்று கொள்வதில்லை என பேசியுள்ளார்.
பாகிஸ்தான் அடைந்த இழப்புகளை ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது. இந்த போர்களை நியாயப்படுத்தும் வகையில் பாகிஸ்தானின் கல்வி அமைப்பும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு உள்ளது. அது இன்றளவும் மாற்றங்களுடன் நடைமுறையில் உள்ளது. பாகிஸ்தான் மீள முடியாத தவறுகளை செய்து விட்டது என கூறியுள்ளார்.