

பெய்ஜிங்,
திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா அமைத்து வரும் உலகின் மிகப்பெரிய மெடோக் நீர்மின் திட்டம், ஆபத்தான நிலநடுக்க மண்டலத்தில் இருப்பதாக அந்நாட்டு புவியியலாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்தியாவின் அருணாச்சல பிரதேச எல்லையிலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் அமையும் இந்த அணை, 60 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுடன் 2033-ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பைஸென் புவிப்பிளவு கோடு அணைப் பகுதிக்கு அருகே இருப்பதால், நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவு அபாயம் அதிகம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணையில் நீர் தேக்கப்படும்போது பாறைகள் பலவீனமடைந்து கட்டுமானத்தின் நிலைத்தன்மை பாதிக்கப்படலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த அணை மூலம் பிரம்மபுத்திரா நதியின் நீரோட்டத்தை சீனா கட்டுப்படுத்தும் என்ற கவலையை இந்தியாவும் வங்கதேசமும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன.
மேலும், இயற்கை பேரிடரால் அணைக்கு சேதம் ஏற்பட்டால் அசாம் மற்றும் வங்கதேசத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இத்திட்டத்தின் ஆபத்துகள் குறித்து கடந்த ஆண்டு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் மற்றும் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் ஏற்கனவே சீன அதிகாரிகளிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.