

கொழும்பு,
மியான்மரில் கடந்த காலங்களில் வன்முறை நேரிட்டதும் வெளியேறியவர்கள் இந்தியா, இந்தோனேஷியா, மலேசியா, வங்காள தேசம் நாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர். இந்தியாவில் தங்கிஉள்ள 40 ஆயிரம் ரோஹிங்யாக்களை வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கையை எடுத்து வருகிறது. கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக அகதிகளாக மியான்மரை விட்டு வெளியேறிய ரோஹிங்யா அகதிகள் புதுடெல்லியிலும், தமிழகத்திலும் தங்கியிருந்தனர். அவர்கள் இந்தியாவிலிருந்து வேறொரு நாட்டிற்கு படகு பயணம் மேற்கொண்டிருந்த வேளை இந்த வருடம் ஏப்ரல் 30 -ல் இலங்கை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மீரிகான சட்ட விரோத குடியேற்றக்காரர் தடுப்பு முகாமில் இவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
மல்லாகம் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் பராமரிப்பின் கீழ் இவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்ததாக அவர்களின் நலன்களை கவனிக்கும் மனித உரிமைகள் சட்டத்தரணியான சிராஸ் நூர்டின் தெரிவிக்கின்றார் என பிபிசி செய்தி வெளியிட்டு உள்ளது.
ஐ.நா அகதிகள் ஆணையத்தின் பராமரிப்பில் இலங்கை தலைநகர் கொழும்புக்கு வெளியில் உள்ள கல்கிசை பகுதியில் பெண்கள், குழந்தைகள் உட்பட 32 ரோஹிங்யா அகதிகள் இரண்டு அடுக்கு வீடொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இலங்கையில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தை பௌத்த பிக்குகள் சுற்றி வளைத்ததை அடுத்து அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 32 ரோஹிஞ்சா அகதிகளும் காவல் துறையினரின் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். காலை முற்றுகையிட்ட பௌத்த பிக்குகள் இவர்களை அங்கிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டது. பயங்கரவாதிகளே அங்கு தங்கியிருப்பதாகக் கூறி அவர்களை வெளியேற்ற வேண்டும் என பௌத்த பிக்குகள் சத்தமிட்டனர்.
அதனையடுத்து ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை காரணமாக அங்கு விரைந்த காவல் துறையினர், அகதிகளை தங்கள் பாதுகாப்பில் பொறுப்பேற்று அழைத்து சென்றுள்ளனர். இலங்கையில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக ஏற்கனவே முஸ்லிம்கள் குரல் எழுப்பி வருவதோடு அவர்களுக்கு நீதி கோரி ஆர்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். மியான்மர் அரசுக்கு தமது ஆதரவை வெளியிட்டு கடும் போக்கு பௌத்த அமைப்புகளும் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.