சீனாவில் இருந்து உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் நிறுவனம் திட்டம்..?

சீனாவில் இருந்து தனது தயாரிப்பை வேறு நாட்டுக்கு மாற்றுவது குறித்து ஆப்பிள் ஆலோசித்து வருகிறது.
சீனாவில் இருந்து உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் நிறுவனம் திட்டம்..?
Published on

பீஜிங்,

சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் அதிருப்தியடைந்த மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் மக்கள் தொடர்ச்சியாக வீதிகளில் இறங்கி போராடினர். பல இடங்களில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.

வன்முறை எதிர்ப்புகளை அடுத்து, வளர்ந்து வரும் புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், சீனாவில் இருந்து தனது தயாரிப்பை வேறு நாட்டுக்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறது.

மாபெரும் தொழில்நுட்ப நிறுவனம் ஆப்பிள், சீனாவில் அதன் உற்பத்தியை நிறுத்த விரும்புகிறது. மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஐபோன்கள் உற்பத்தி குறைந்து விட்டதாகவும், ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது, நிறுவனம் தனது தயாரிப்புகளில் 5 சதவீதத்தை சீனாவுக்கு வெளியே உற்பத்தி செய்கிறது.2025 ஆம் ஆண்டுக்குள், ஐபேட், மேக், ஆப்பிள் வாட்ச், ஏர்போட்ஸ் உள்ளிட்ட மொத்த ஆப்பிள் தயாரிப்புகளில் 25 சதவீதத்தை சீனாவிற்கு வெளியே பிற ஆசிய நாடுகளில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

ஆப்பிள் தனது பல ஒப்பந்த உற்பத்தியாளர்களை சீனாவிலிருந்து உற்பத்தியை நகர்த்துமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்தியா மற்றும் வியட்நாமில் தனது வணிகத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலித்து ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com