ஒரே வாரத்தில் 2-வது சம்பவம்: நைஜீரியாவில் பள்ளிக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜர் மாகாணம் பாபிரி நகரில் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளி செயல்படுகிறது.
ஒரே வாரத்தில் 2-வது சம்பவம்: நைஜீரியாவில் பள்ளிக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்
Published on

அபுஜா,

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கிமுனையில் கடத்தி சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர் உள்பட 2 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இதனையடுத்து கடத்தல்காரர்களிடம் இருந்து 2 மாணவிகள் தப்பி ஓடி போலீசில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் உதவியுடன் மற்ற மாணவிகளை மீட்கும் முயற்சியில் போலீஸ் தீவிரமாக இறங்கி உள்ளது.

இந்த மீட்பு பணிக்கு உதவுவதற்காக நாட்டின் பாதுகாப்பு துறை மந்திரி அல்ஹாஜ்ஜி பெல்லோவை கெபி மாகாணத்துக்கு செல்ல அதிபர் போலா டினுபு உத்தரவிட்டுள்ளார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு மேற்கு ஜம்பாரா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து கடத்தப்பட்ட 279 மாணவர்களை மீட்பதில் முக்கிய பங்காற்றி இருந்தார். இந்தநிலையில் நைஜர் மாகாணம் பாபிரி நகரில் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளி செயல்படுகிறது. இதன் அருகே மாணவர்கள் தங்கும் விடுதியும் அமைந்துள்ளது. அந்த விடுதிக்குள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சிலர் நுழைந்தனர். பின்னர் துப்பாக்கி முனையில் 100 மாணவர்களை அந்த கும்பல் கடத்தி சென்றது.

தற்போது ஒரே வாரத்தில் 2-வது முறையாக பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து உறைவிட பள்ளிகளையும் தற்காலிகமாக மூட ஏற்கனவே அரசாங்கம் உத்தரவிட்டு இருந்தது. இந்தநிலையில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தனது அனைத்து வெளிநாட்டு பயணங்களையும் ஒத்தி வைப்பதாக அதிபர் போலா டினுபு அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com