மியான்மரில் பரபரப்பு 7 வயது சிறுமியை சுட்டு கொன்ற ராணுவம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதேவேளையில் இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு ராணுவம் அடக்குமுறையைக் கையாண்டு வருகிறது.
மியான்மரில் பரபரப்பு 7 வயது சிறுமியை சுட்டு கொன்ற ராணுவம்
Published on

நேபிடாவ்,

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதேவேளையில் இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு ராணுவம் அடக்குமுறையைக் கையாண்டு வருகிறது. ஆட்சி கவிழ்ப்பு நடந்த பிப்ரவரி 1 முதல் இப்போது வரை 260-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த நாட்டின் சிவில் உரிமைகள் குழு கூறுகிறது.

பகலில் போராட்டக்காரர்களை விரட்டியடிக்கும் ராணுவம் இரவு நேரத்தில் அவர்களை வீடு புகுந்து கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது.

அந்தவகையில் நேற்றுமுன்தினம் இரவு மண்டலே நகரில் உள்ள வீடுகளுக்குள் ராணுவ வீரர்கள் அதிரடியாக நுழைந்து போராட்டக்காரர்களை கைது செய்தனர். அப்போது மவுங் கோ ஹாஷின் பா என்பவரை கைது செய்ய ராணுவ வீரர்கள் அவரது வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது மவுங் கோ ஹாஷின் பாவின் 7வயது மகள் கின் மோ சிட் ராணுவ வீரர்களைக் கண்டு பயந்து தனது தந்தையை நோக்கி ஓடினாள். அப்போது ராணுவ வீரர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது. இதில் சிறுமி கின் மோ சிட்டின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தாள்.

7 வயது சிறுமி ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இதுகுறித்து ராணுவம் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேசமயம் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட 628 பேரை நேற்று ராணுவம் விடுதலை செய்தது. இவர்களில் பெரும்பாலானவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் ஆவர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com