

* ஆப்கானிஸ்தானில் சாரி பவுல் மாகாணத்தின் சய்யாத் மாவட்டத்தில் போலீஸ் அதிகாரிகளின் வாகனங்களை சுற்றிவளைத்து தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ் அதிகாரிகள் 2 பேர் உயிர் இழந்தனர்.
* ஐ.நா.வின் கட்டுப்பாடுகளை மீறி ஈரான் ஏவுகணை சோதனை நடத்தியதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ கடந்த வாரம் குற்றம் சாட்டினார். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு குழு அவசரமாக கூடி விவாதிக்க வேண்டுமென பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து வலியுறுத்தி உள்ளன.
* வெனிசுலா அதிபர் நிகோலஸ் மடுரோ அரசு முறை பயணமாக நேற்று ரஷியா புறப்பட்டு சென்றார். அங்கு அவர் ரஷிய அதிபர் புதினை சந்தித்து இரு தரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
* தெற்கு சூடான் நாட்டில் பென்டியூ என்கிற நகரில் சாலையில் வாகனங்களில் செல்லக்கூடிய பெண்களை மர்ம ஆசாமிகள் வழிமறித்து பாலியல் ரீதியில் துன்புறுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 10 நாட்களில் மட்டும் இப்படி 125 பெண்கள் பலியால் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதற்கு அந்நாட்டில் உள்ள ஐ.நா. அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
* மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ ஜனநாயக குடியரசில் உள்ள அமெரிக்கா தூதரகத்துக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதன் காரணமாக தலைநகர் கின்ஷாசாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது.