கனடாவில் கைது செய்யப்பட்ட ஹூவாய் நிறுவன அதிபர் மகளுக்கு நிபந்தனை ஜாமீன்

ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையை சீனாவின் பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனமான ஹூவாய் மீறியதாக புகார் எழுந்துள்ளது.
கனடாவில் கைது செய்யப்பட்ட ஹூவாய் நிறுவன அதிபர் மகளுக்கு நிபந்தனை ஜாமீன்
Published on

வான்கூவர்,

அமெரிக்கா இந்தப் புகார் மீது விசாரணை நடத்தி வந்தது.

இந்த நிலையில் கனடாவில் உள்ள வான்கூவர் நகர விமான நிலையத்தில் ஹூவாய் நிறுவன அதிபர் ரென் ஜெங்பெய்யின் மகள் மெங்வான்ஜவ் கடந்த 1-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது தொடர்பான விசாரணை அங்குள்ள கோர்ட்டில் நடக்கிறது.

இதற்கிடையே அவரை ஜாமீனில் விடுவிக்க கோரி பிரிட்டிஷ் கொலம்பியா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவின் மீது விசாரணை நடத்தப்பட்டது. அதன் முடிவில் அவரை நிபந்தனை ஜாமீனில் விடுவித்து நீதிபதி வில்லியம் ஈர்க்கே நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

அவருடைய ஜாமீனுக்கு 16 நிபந்தனைகள் விதிக்கப் பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானவை:-

* 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ.72 கோடி) ரொக்க ஜாமீனில் விடுதலை செய்யப்படுகிறார்

* மெங்வான்ஜவ் வான்கூவர் நகரில் உள்ள இல்லத்தில் தங்கி இருக்க வேண்டும். குறிப்பாக இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை வீட்டில் தங்கி இருக்க வேண்டும்.

* அவர் தனது பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்க வேண்டும்.

* அவரை கண்காணித்து வரும் கம்பெனி ஊழியர்கள், அவரது இருப்பிடத்தை அறிந்து கொள்வதற்கான மின்னணு கருவியை (டிராக்கிங் டிவைஸ்) அவர் தன் உடலில் அணிந்து கொள்ள வேண்டும். கோர்ட்டு உத்தரவை மெங்வான்ஜவ் ஆதரவாளர்கள் கைதட்டி வரவேற்று கொண்டாடியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com