

கவுகாத்தி,
வடகிழக்கு மாநிலங்களான அசாம்-அருணாசலபிரதேசம் இடையே எல்லை பிரச்சினை இருந்துவருகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா, அருணாசலபிரதேச முதல்-மந்திரி பெமா காண்டு இடையே முதல் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நேற்று கவுகாத்தியில் நடைபெற்றது.
அப்போது, இரு மாநில எல்லை பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, குறிப்பிட்ட காலத்தில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இரு மாநிலங்களிலும் மாவட்ட அளவிலான கமிட்டிகளை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
பேச்சுவார்த்தைக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அசாம் முதல்-மந்திரி ஹிமந்த சர்மா இதை தெரிவித்தார். பிரச்சினைக்குரிய பகுதிகளில் இந்த கமிட்டிகள் கூட்டு நில அளவையை மேற்கொள்ளும். அது தொடர்பான விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
எல்லை பிரச்சினை தொடர்பாக அசாம் முதல்-மந்திரியுடன் நடந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக அருணாசலபிரதேச முதல்-மந்திரி பெமா காண்டு தெரிவித்தார்.