

லண்டன்,
உலக அளவில் கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளில், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசி முக்கியமானது ஆகும். இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டதாக கூறி இந்த தடுப்பூசிக்கு டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து போன்ற நாடுகள் தற்காலிகமாக தடை விதித்து உள்ளன. ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளும் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசிக்கு தடை விதித்துள்ளது.
இதனால் பிற நாடுகளிலும் இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி விவகாரம் குறித்து உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழுவும் ஆய்வு செய்ய இருப்பதாக கூறியுள்ளது. இந்த நிலையில், அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி பாதுகாப்பானது என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
தி டைம்ஸ் நாளிதழில் எழுதிய கட்டுரையில் போரிஸ் ஜான்சன் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், தடுப்பூசி பாதுகாப்பானது, நல்ல செயல் திறன் மிக்கது. இந்தியா முதல் அமெரிக்கா, இங்கிலாந்து என பல இடங்களில் இந்த தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டு உலக அளவில் பயன்படுத்தப்படுகிறது எனத்தெரிவித்துள்ளார்.