டாக்கா விமான நிலையத்தில் 12¼ கிலோ தங்க கட்டிகளுடன் இந்தியர் சிக்கினார்

தாய்லாந்தின் தலைநகரான பாங்காக் நகரில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் விமானம், வங்கதேசத்தின் தலைநகரான டாக்கா ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு வந்து தரை இறங்கியது.
டாக்கா விமான நிலையத்தில் 12¼ கிலோ தங்க கட்டிகளுடன் இந்தியர் சிக்கினார்
Published on

டாக்கா,

விமானத்தில் ஒருவர் ஏராளமான தங்க கட்டிகளை கடத்தி வருவதாக டாக்காவில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த நிலையில் அந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்த ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை போட்டனர்.

அப்போது அவர் 12 கிலோ 300 கிராம் எடை உள்ள 22 தங்க கட்டிகளை தன் உடலில் மறைத்து எடுத்து வந்து இருப்பதைக் கண்டனர். அவற்றை அவர்கள் கைப்பற்றினர்.

அவரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அவர் இந்தியர் என்பதுவும், அவரது பெயர் அர்ஷத் அயாஸ் அகமது (வயது 46) என்பதுவும் தெரியவந்தது.

அவரை சுங்கத்துறை அதிகாரிகள், டாக்கா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவர் மீது வங்கதேச சுங்கத்துறை சட்டம் 1969ன் கீழும், சிறப்பு அதிகார சட்டம் 1974ன் கீழும் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என சுங்கத்துறை துணை கமிஷனர் ஓதெல்லோ சவுத்ரி தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்டு உள்ள தங்க கட்டிகள் இந்தியாவில் சுமார் ரூ.3 கோடியே 69 லட்சம் மதிப்பு கொண்டவை ஆகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com