ஜப்பானில் சுற்றுலா படகு கவிழ்ந்து 10 பேர் உயிரிழப்பு

ஜப்பானில் சுற்றுலா சென்ற படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி 3 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மீட்பு பணிக்கு புறப்பட்ட படகு
மீட்பு பணிக்கு புறப்பட்ட படகு
Published on

டோக்கியோ,

ஜப்பான் நாட்டின் வடக்கே ஹொக்கைடோ தீவு பகுதியில் ஷாரி என்ற இடத்தில் தேசிய பூங்கா ஒன்று உள்ளது. இங்குள்ள வனவாழ் உயிரினங்களை காண்பதற்காக சுற்றுலாவாசிகள் செல்வது வழக்கம். இதேபோன்று நேற்று மதியம் 2 குழந்தைகள் உள்பட 24 பேர் சுற்றுலா படகு ஒன்றில் இந்த பகுதிக்கு சென்றுள்ளனர். இதுதவிர, படகை செலுத்த 2 பேர் இருந்துள்ளனர்.

இந்த நிலையில், நடுவழியில் 2 மணிநேர பயணத்திற்கு பின்பு, படகில் நீர் உட்புகுந்துள்ளது. இதனால், அச்சத்தில் பயணிகள் அலறல் சத்தம் போட்டு உள்ளனர். எனினும், அவர்களில் சிலரிடம் உயிர்காக்கும் கவசம் இருந்துள்ளது.

எனினும், சுற்றுலா படகை பற்றி தகவல் எதுவும் கரையில் இருந்தவர்களுக்கு தெரியாத நிலையில், அதனை தேடி கடலோர காவல் படையின் 7 கப்பல்கள், 3 விமானங்கள் மற்றும் 4 ஹெலிகாப்டர்கள் சென்றுள்ளன. ரோந்து படகுகளும் சென்றுள்ளன.

இதில், மொத்தம் 10 பேரின் உடல்கள் இன்று கண்டெடுக்கப்பட்டு உள்ளன என கடலோர காவல் படை உயரதிகாரி தெரிவித்து உள்ளார். அவர்களில் 7 பேர் ஆண்கள். 3 பேர் பெண்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com