

காபூல்,
ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்பு தலீபான்கள் கைப்பற்றினர். அங்கு புதிய ஆட்சியை அமைக்கப்போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த சூழலில் காபூல் விமான நிலைய நுழைவு வாயிலில் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக ஆப்கானிய மக்கள் கட்டுக்கடங்காமல் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே இன்று (வியாழக்கிழமை) இரட்டை குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. விமான நிலையத்தின் நுழைவு வாயில் ஒன்றில் இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பில் அமெரிக்கர்கள், குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தலீபான் அதிகாரி ஒருவர் கூறுகையில், குழந்தைகள் உட்பட குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் என்றும், தலீபான் காவலர்கள் பலர் குண்டுவெடிப்பில் காயமடைந்தனர் என்று அவர் தெரிவித்தார்.
குறைந்தது நான்கு அமெரிக்க ராணுவ வீரர்கள் காயமடைந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மோசமான குண்டுவெடிப்பில் சிக்கி சிலர் உடல் உறுப்புகளை இழந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.