ஆப்கானிஸ்தானில் கனமழை: வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 பேர் பலி

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 1,800-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.
காபூல்,
ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக, பனிப்பொழிவுக்கு இடையே கனமழை பெய்து வருகிறது. இதன்படி அங்குள்ள கபிசா, பர்வான், டாய்கண்டி, உருஸ்கான், கந்தஹார், ஹெல்மண்ட், பாட்கிஸ், பர்யாப், படக் ஷான், ஹெராத் உள்ளிட்ட மாகாணங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
அங்குள்ள ஆறுகள், நீர்நிலையில் நிரம்பியதால் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் சுமார் 13 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நாசமாகின. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக 1,800-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. எனவே வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணி முடுக்கி விடப்பட்டது.
அப்போது கட்டிட இடிபாடு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 17 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். எனவே அங்குள்ள மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கி உள்ளது. மேலும் இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் தேசிய மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே உள்நாட்டு போரால் தவிக்கும் ஆப்கானிஸ்தானில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளன. இதன் காரணமாகவே கட்டிடங்கள் இடிந்து பெரும் சேதம் ஏற்பட்டு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே வெள்ள சேத மதிப்பை கணக்கிட பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தலீபான் அரசாங்கம் ஒரு குழுவை அனுப்பி உள்ளது.






