

ஜகார்தா,
இந்தோனேசியா தீவில் பருவகால புயல்களில் ஒன்றான செரோஜா புயல் கடுமையாக தாக்கி வருகிறது. கிழக்கு நூசா தெங்காரா மாகாணத்தின் தெற்கே சவு கடல் பகுதியில் புயலின் பாதிப்புகளை முன்னிட்டு கடல் அலைகள் 6 மீட்டர் உயரத்திற்கு எழும்பின.
புயலை தொடர்ந்து கனமழை பெய்ததுடன், பலத்த காற்றும் வீசியது. இதனால் மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலர் உயிரிழந்தனர். அவற்றில் கிழக்கு புளோரெஸ் மாவட்டத்தில் 72 பேர் அதிக அளவாக உயிரிழந்து உள்ளனர்.
இதுதவிர, லெம்பாட்டா (47), அலோர் (28) மாவட்டங்களிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. மற்றும் மாகாண தலைநகர் குபாங் நகரில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து புயல் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு வாடகை வீடுகளில் தங்க வைத்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ள்ன.
இந்த புயலால் மொத்தம் 177 பேர் உயிரிழந்து உள்ளனர். 45 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. புயலால் பாறைகள் சரிந்து நிலப்பகுதிகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. இதனால் பல கிராமங்கள் தனித்து விடப்பட்டு உள்ளன.
இந்த பகுதிகளில் இன்று ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகளில் சென்று நிவாரண உதவிகள் வழங்கப்படும் என மாகாண துணை ஆளுநர் ஜோசப் நயி சொய் காணொலி காட்சி வழியே செய்தியாளர்களுடனான சந்திப்பில் கூறியுள்ளார்.