

சுக்ரெ,
பொலிவியாவில் ராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பொலிவியா. இந்நாட்டின் இங்கவி மாகாணம் வியாச்சா நகரில் ராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த ராணுவ தளத்தில் ஏராளமான ராணுவ வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ராணுவ தளத்தில் பீரங்கி படைப்பிரிவில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 81 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த வெடி விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அதேவேளை, இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.