கனடாவில் இந்து பூங்கா மீது தாக்குதல்; காலிஸ்தானி பயங்கரவாதிகளை குற்றம் சாட்டிய முன்னாள் தூதர்

கனடாவில் இந்து ஸ்தலத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு காலிஸ்தானி பயங்கரவாதிகளே காரணம் என முன்னாள் இந்திய தூதர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
கனடாவில் இந்து பூங்கா மீது தாக்குதல்; காலிஸ்தானி பயங்கரவாதிகளை குற்றம் சாட்டிய முன்னாள் தூதர்
Published on

டொரண்டோ,

கனடாவின் டொரண்டோ நகரில் பிராம்ப்டன் பகுதியில் ஸ்ரீபகவத் கீதா பூங்கா அமைந்துள்ளது. பகவத் கீதையின் பெயரில் அமைந்த இந்த பூங்காவின் பெயர் பலகை சேதப்படுத்தப்பட்டு இருந்தது. இதற்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கனடாவில் உள்ள இந்திய தூதரகம், இதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கனடா அரசை வலியுறுத்தி உள்ளது. இந்த தாக்குதலை கனடாவின் பிராம்ப்டன் பகுதி மேயர் பேட்ரிக் பிரவுனும், உறுதிப்படுத்தினார்.

இதுபோன்ற தாக்குதல்களை சகித்து கொள்ள முடியாது என்றும் அவர் நேற்று கூறினார். இந்நிலையில், கனடாவுக்கான முன்னாள் இந்திய துணை தூதர் நீரஜ் ஸ்ரீவஸ்தவா இன்று கூறும்போது, இந்த பூங்கா பெயர் பலகையை காலிஸ்தானி பயங்கரவாதிகளே சேதப்படுத்தி உள்ளனர் என கூறியுள்ளார்.

அவர் கூறும்போது, இது போன்ற வெறுப்புணர்வுடன் கூடிய தாக்குதல் நடத்தப்படுவது முதன்முறையல்ல. கனடாவில் செப்டம்பர் 15-ல் டொரண்டோவில் உள்ள சுவாமி நாராயண் கோவிலும் அசிங்கப்படுத்தப்பட்டது.

அதன் மீது காலிஸ்தான் வாசகங்களும் வர்ணம் பூசப்பட்டு இருந்தன. இந்த குற்ற செயல்களை நிறுத்த வேண்டிய தேவையான நடவடிக்கைககளை எடுக்க இந்திய அரசும், கனடாவை வற்புறுத்தி கேட்டு கொண்டது. இந்துக்கள் மற்றும் அவர்களது வழிபாட்டு தலங்களை பாதுகாக்கும்படி அரசு கேட்டு கொண்டுள்ளது என கூறியுள்ளார்.

அதனால், இந்த முறையும் காலிஸ்தானி பயங்கரவாதிகளின் வேலையாகவே இந்த தாக்குதல் இருக்க கூடும் என எனக்கு தோன்றுகிறது என முன்னாள் இந்திய தூதர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com