உக்ரைன் ராணுவ தளம் மீது தாக்குதல்; 70 வீரர்கள் மரணம்

உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் நகருக்கு இடையே அமைந்த ராணுவ தளம் மீது நடந்த தாக்குதலில் 70 வீரர்கள் மரணம் அடைந்துள்ளனர்.
உக்ரைன் ராணுவ தளம் மீது தாக்குதல்; 70 வீரர்கள் மரணம்
Published on

கீவ்,

உக்ரைன் மீது முன்அறிவிப்பின்றி மற்றும் நியாயமற்ற முறையில் நடத்தப்படும் போரை முடிவுக்கு கொண்டு வரும்படி ஐ.நா. அமைப்பு சிறப்பு கூட்டத்தில் நேற்று அழைப்பு விடப்பட்டது. ஆனால், அண்டை நாடான உக்ரைன் மீது நடத்தும் தனது போரை நியாயப்படுத்திய ரஷியா, சொந்த மக்கள் மீது பகைமையுடன் உக்ரைன் நடந்து கொள்கிறது என கூட்டத்தில் தெரிவித்தது.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் இன்று 6வது நாளாக நீடித்து வருகிறது. சர்வதேச அளவில் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தபோதும், உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில் இருந்து ரஷியா பின்வாங்க தயாராக இல்லை. ஒருபுறம் பேச்சு நடத்த உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தபோதும், அணு ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவு, படைகள் குவிப்பு, எல்லைகளை முற்றுகையிடுதல் போன்ற செயல்களில் ரஷியா இறங்கி உள்ளது.

தொடர்ந்து உக்ரைனின் ராணுவ தளங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீது ரஷியா தாக்குதலை தொடுத்து வருகிறது. ரஷிய ராணுவ படைகளின் அணிவகுப்புகளை வெள்ளை மாளிகை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த நிலையில், கீவ் நகர் அருகே ரஷிய ராணுவ படைகள் நெருங்கியுள்ளன. இந்த படைகள் வரிசையாக 40 மைல்கள் தொலைவுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

ஆன்டனோவ் விமான நிலையத்திற்கு அருகே சாலை முழுவதும் படைகள் ஆக்கிரமித்து காணப்படுகின்றன. இந்த படைகள் பயணம் செய்து வரும் இவான்கீவ் நகருக்கு வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் அமைந்த சாலைகள் அருகே பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் காட்சிகளும் புகைப்படங்களில் காணப்படுகின்றன.

இதுதவிர்த்து, உக்ரைன் எல்லையையொட்டி 20 மைல்கள் வடக்கே, தெற்கு பெலாரஸ் பகுதியில் கூடுதல் தரை படைகளும், தரைகளை தாக்கி அழிக்கும் ஹெலிகாப்டர் படை பிரிவுகளும் குவிக்கப்பட்டு உள்ள புகைப்படங்களும் வெளியிடப்பட்டு உள்ளன. இதுபோன்ற பெரிய படைகளை கண்டு அச்சம் தெரிவித்து உள்ள அதிகாரிகள் பலர், உக்ரைனில் சமீபத்திய வன்முறை, பொதுமக்கள் படுகொலைகள் மற்றும் உயிரிழப்புகள் ஆகியவற்றை பற்றியும் கவலை தெரிவித்து உள்ளனர்.

தொடக்கத்தில், ரஷியாவுக்கு எதிரான உக்ரைனின் ஆக்ரோஷ எதிர்ப்புகளை கண்டு அதிர்ச்சியடைந்தபோதும், தற்போது சூழ்நிலை அவர்களுக்கு அதிக சவாலாக உள்ளது என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், ரஷிய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகிறது. இதில், தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் நகருக்கு இடையே ஆக்டைர்கா என்ற பகுதியில் உக்ரைனின் ராணுவ தளம் ஒன்று அமைந்துள்ளது. இதனை இலக்காக கொண்டு நடந்த தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த 70 வீரர்கள் மரணம் அடைந்துள்ளனர் என ஊடக தகவல் தெரிவிக்கின்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com