

மெல்போர்ன்,
இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் நெகிழ்ச்சி வாழ்த்து! 'சுதந்திரப்பாதை எளிதானதாக இருக்கவில்லை' என பாராட்டு.
இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியாவுக்குத் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் இந்தியாவுக்கு விடுத்துள்ள நெகிழ்ச்சியான வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–
இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். ஒரு சுதந்திர நாடாக இந்தியா உருவெடுத்த பாதை அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. இந்திய மக்களின் அபாரமான மன உறுதி, நம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவற்றால் மட்டுமே இந்த புதிய விடியல் சாத்தியமானது. கடந்த 8 தசாப்தங்களாக இந்தியா பல துறைகளிலும் அசுர வளர்ச்சி கண்டு வலிமையான நாடாக உருவெடுத்துள்ளது.
இன்றைய தேதியில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாகவும் திகழும் இந்தியாவின் சாதனைகளும், அதன் பரந்த திறனும் நம்மை பிரமிக்க வைக்கிறது. எனது நெருங்கிய நண்பரான இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் ஏற்கனவே கூறியது போல, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு முன்னெப்போதையும் விட தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய வம்சாவளியினர், இரு நாடுகளின் நட்புறவை இணைக்கும் பாலமாக திகழ்கிறார்கள். இந்தியாவின் கலாச்சாரம், பன்முகத்தன்மை மற்றும் வியக்கத்தக்க சாதனைகளை கொண்டாடும் இந்த நன்னாளில் நானும் உங்களோடு இணைந்து கொள்கிறேன். அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
இவ்வாறு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.