ஆஸ்திரேலியாவில் ஊரடங்குக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை; போலீசார், போராட்டக்காரர்கள் மோதல்

கொரோனா வைரசின் முதல் அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய‌ ஆஸ்திரேலியா தற்போது கொரோனா 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்கி பரிதவித்து வருகிறது.
ஆஸ்திரேலியாவில் ஊரடங்குக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை; போலீசார், போராட்டக்காரர்கள் மோதல்
Published on

குறிப்பாக நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்னியில் 9 வாரங்களாக முழு ஊரடங்கு அமலில் உள்ள போதும் ஜெட் வேகத்தில் வைரஸ் பரவி வருகிறது. அந்த வகையில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரு நாளில் மட்டும் சிட்னியில் புதிதாக 825 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு மேலும் ஒரு மாதத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விக்டோரியா மாகாணத்தின் தலைநகரான மெல்போர்னிலும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அரசின் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் ஆஸ்திரேலியா முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக சிட்னி, மெல்போர்ன் மற்றும் பிரிஸ்பேன் ஆகிய நகரங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியபடி பேரணியாக சென்றனர். இந்த போராட்டத்தின்போது மேற்கூறிய 3 நகரங்களிலும் பெரிய வன்முறை வெடித்தன. போலீசாரும், போராட்டக்காரர்களும் கடுமையாக மோதி கொண்டனர். இதில் போலீஸ் அதிகாரிகள் 7 பேர் உட்பட ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

மேலும் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com