

வியன்னா,
அரசியல் இஸ்லாமிற்கு எதிரான நடவடிக்கையாக துருக்கி நாட்டில் இருந்து நிதிபெறும் 60 இமாம்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தார் வெளியேற்றப்படுவார்கள் என ஆஸ்திரியா உள்துறை மந்திரி ஹெர்பெர்ட் கிக்கல் கூறியுள்ளார். வியன்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெர்பெர்ட் கிக்கல், 150 பேர் வரையில் அவர்களுடைய வசிப்பிட உரிமையை இழக்கும் ஆபத்தை எதிர்க்கொண்டு உள்ளார்கள் என குறிப்பிட்டு உள்ளார். துருக்கி ஆதரவுப்பெற்ற மசூதியில் கலிப்பொலி போர்த்தொடர் ஒத்திகை சிறார்களை கொண்டு நடைபெற்று உள்ளது என்பது மதவிவகாரங்கள் தொடர்பான அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்து உள்ளது. 7 மசூதிகள் மூடப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கலிப்பொலி போர்த்தொடர் என்பது முதலாம் உலகப் போரின் போது துருக்கியில் கலிப்பொலியில் இடம்பெற்ற போர் நடவடிக்கை ஆகும்.
அரசியல் இஸ்லாமியம் மற்றும் தீவிரமயமாக்கல் ஆகியவற்றிற்கு தேசத்தில் இடம் கிடையாது என ஆளும் கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மசூதியில் நடைபெற்ற ஒத்திகை தொடர்பான புகைப்படங்களை அந்நாட்டு மீடியா வெளியிட்டது. அதில் சிறார்கள் உருவத்தை மறைக்கும் சீருடைகளை அணிந்து, துருக்கி தேசிய கொடியை அசைத்து, அதற்கு மரியாதை செலுத்தி, உயிரிழப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று உள்ளது.