

டாக்கா,
வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் மாணவர் போராட்டம் தொடர்ச்சியாக, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனையடுத்து, வங்காளதேசத்தில் பேராசிரியர் முகமது யூனூஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.
இதன்பின்னர், பிப்ரவரி 12-ல் பொது தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. அதன்படி, வங்காளதேசத்தில் 13-வது தேசிய நாடாளுமன்றத்திற்கான பொது தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கி நடந்தது.
இந்நிலையில், வங்காளதேச தேசியவாத கட்சி வேட்பாளர்கள் 209 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அந்த கூட்டணி மொத்தம் 212 இடங்களை கைப்பற்றி உள்ளது. ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி 68 இடங்களை வென்றுள்ளது. அக்கட்சி எதிர்க்கட்சி வரிசையில் சேரவுள்ளது. வங்காளதேச தேசியவாத கட்சியை சேர்ந்த தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராவது உறுதியாகி உள்ளது. இன்னும் 3 அல்லது 4 நாட்களில் பதவியேற்புக்கான விழா நடைபெறும்.
இந்நிலையில், இதற்கான விழாவில் தெற்காசிய தலைவர்களை அழைப்பது பற்றி டாக்காவில் நிருபர்களிடம் பேசிய வங்காளதேச தேசியவாத கட்சியின் தலைவர் ஈசானுல் ஹோக் மிலன், அவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என சரியாக எனக்கு தெரியாது. ஆனால், எல்லோரையும் அழைப்பார்கள் என நம்புகிறேன்.
சரியாக எனக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால், பிரதமர் மோடி அழைக்கப்பட வேண்டும். அது பொதுவான மரியாதை. கட்சி அமைப்பாளர்கள் அதனை செய்வார்கள். ஒட்டுமொத்த உலகமும் எங்களுடன் இருக்கும் என நான் நம்புகிறேன் என்றார்.
சர்வதேச உறவுகள் பற்றி குறிப்பிட்ட அவர், அனைவருக்கும் நாங்கள் நண்பர்கள் என்றார். யாருக்கும் மனவருத்தம் ஏற்படுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்றார்.