வங்காளதேசம்: ஷேக் ஹசீனாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டாக்கா,
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த மாணவர் புரட்சியில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் பலர் கொல்லப்பட்டனர். இந்த போராட்டம் மற்றும் வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்ந்தது. அத்துடன் அவர் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இந்த போராட்டத்தில் நிகழ்ந்த கூட்டுக்கொலை, சித்ரவதைகள், வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஷேக் ஹசீனா மற்றும் அப்போதைய உள்துறை மந்திரி அசாதுசமான் கான், அப்போதைய போலீஸ் ஐ.ஜி. சவுத்ரி அப்துல்லா ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
நாட்டின் சர்வதேச குற்றத்தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கில் நேற்று முறைப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. அப்போது முன்னாள் ஐ.ஜி. சவுத்ரி அப்துல்லா மட்டும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரை போலீசார் பலத்த காவலுடன் ஆஜர்படுத்தினர். இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கும் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கூட்டுக்கொலை மற்றும் சித்ரவதை தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது அவரது கட்சியினருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.






