

டாக்கா,
வங்காளதேசத்தில் 2024-ம் ஆண்டு மாணவர் போராட்டம் தொடர்ச்சியாக, அவாமி லீக் கட்சியை சேர்ந்த ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாட்டை விட்டு தப்பினார். அவர், பாதுகாப்பாக இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார். அந்நாட்டில், வருகிற 12-ந்தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது.
எனினும், வங்காளதேச பொது தேர்தலில் போட்டியிட, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், வங்காளதேசத்தில் தினாஜ்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்ட அவாமி லீக்கை சேர்ந்த முன்னாள் மந்திரி மற்றும் மூத்த அரசியல்வாதியான ரமேஷ் சந்திர சென் (வயது 83) திடீர் மரணம் அடைந்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் சிறையில் அடைக்கப்பட்ட அவர், அரசியல் காரணங்களுக்காக விடுவிக்கப்படாமல் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், சிறையில் இருந்தபோது, அவருக்கு நேற்று காலை உடல்நல குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் தினாஜ்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
பொது தேர்தல் நடைபெற 4 நாட்களே உள்ள நிலையில், பிரபல கட்சியை சேர்ந்த மூத்த அரசியல்வாதி ஒருவர் மரணம் அடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.