வங்காளதேசம்: பெட்ரோலுக்கு காசு கேட்ட இந்து ஊழியர் கொடூர கொலை

சொகுசு கார் உரிமையாளர் அபுல் ஹாசிம் (வயது 55) மற்றும் ஓட்டுநர் கமல் உசைன் (வயது 43) ஆகியோரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
உள்படம்; பேராசிரியர் யூனூஸ்
உள்படம்; பேராசிரியர் யூனூஸ்
Published on

டாக்கா,

வங்காளதேசத்தில் மாணவர் போராட்டம் தொடர்ச்சியாக, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார். இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார். இந்த நிலையில், பேராசிரியர் யூனூஸ் தலைமையிலான இடைக்கால அரசில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல் கடந்த டிசம்பர் மத்தியில் அதிகரிக்க தொடங்கியது.

இதற்கு இந்தியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனினும், கும்பல் தாக்குதல் குறையாமல் தொடர்ந்து வருகிறது. இதில், மருந்து கடை உரிமையாளர், தொழிலதிபர்கள், ஆலை பணியாளர், வாலிபர்கள் என இந்துக்கள் இலக்காக கொள்ளப்பட்டனர். பலர் கொடூர கொலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், ராஜ்பாரி மாவட்டத்தில் கோவாலேண்டா மோர் பகுதியில் கரீம் என்ற பெயர் கொண்ட எரிபொருள் நிலையத்தில் கார் ஒன்று நேற்று அதிகாலை 4.30 மணியளவில் வந்துள்ளது. அதில் இருந்தவர்கள் பெட்ரோல் போட்டு விட்டு காசு தராமல் செல்ல முயன்றனர்.

ஏறக்குறைய ரூ.3 ஆயிரம் வரை பணம் கொடுக்காமல் தப்ப முயன்றனர். இதனால், ஊழியர் ரிபோன் சஹா (வயது 30) என்ற இந்து வாலிபர் காரை மறித்து, பணம் கொடுத்து விட்டு செல்லுங்கள் என கூறியுள்ளார்.

ஆனால், அவர்கள் காரை அவர் மீது ஏற்றி, கொலை செய்து விட்டு தப்பினர். இந்த சம்பவத்தில் அவர் படுகாயமடைந்து பலியானார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், சொகுசு கார் உரிமையாளர் அபுல் ஹாசிம் (வயது 55) மற்றும் ஓட்டுநர் கமல் உசைன் (வயது 43) ஆகியோரை கைது செய்து உள்ளனர். ஹாசிம், கான்டிராக்டராக தொழில் செய்து வருகிறார். வங்காளதேச தேசியவாத கட்சியின் முன்னாள் பொருளாளராகவும், ஜுபோ தல் மாவட்ட முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com