

டாக்கா,
வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசுக்கு எதிரான மாணவர் போராட்டம் வன்முறையாக வெடித்தது. 2 மாத கால போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.
தீவிர போராட்டம் தொடர்ச்சியாக பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனையடுத்து, வங்காளதேசத்தில் பேராசிரியர் முகமது யூனூஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.
இதன்பின்னர், பிப்ரவரி 12-ல் பொது தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. அதன்படி, வங்காளதேசத்தில் 13-வது தேசிய நாடாளுமன்றத்திற்கான பொது தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 6 மணி முதல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
இதில், அந்நாட்டின் இடைக்கால தலைவர் மற்றும் தலைமை ஆலோசகரான யூனூஸ் குல்ஷான் மாடல் பள்ளி மற்றும் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு சாவடிக்கு இன்று காலை வந்து வாக்களித்து விட்டு சென்றார். பல்வேறு அரசியல் பிரமுகர்களும், கட்சி தொண்டர்களும் மற்றும் பொதுமக்களும் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.
டாக்காவில் 13 தொகுதிகளை சேர்ந்த 1,400 வாக்கு சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என முன்பே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், வங்காளதேசத்தின் குல்னா சதரில் உள்ள ஆலியா மதரஸா வாக்கு சாவடியில் இரு கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.
அப்போது, வங்காளதேச தேசியவாத கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான மொஹிபுஜ்ஜாமான் கொச்சி என்பவர் மோதலில் சிக்கி உயிரிழந்து உள்ளார்.
வங்காளதேச தேசியவாத கட்சிக்கான குல்னா பெருநகருக்கான முன்னாள் கட்சி செயலாளராக அவர் இருந்துள்ளார். அவருடைய மரணம் பற்றி அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கூறும்போது, அவரை கீழே தள்ளி விட்டனர். இதில் அவருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது, அதில் பலனின்றி உயிரிழந்து விட்டார் என தெரிவித்தனர்.