வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்..!

கலிதா ஜியா இரு முறை வங்காளதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்கா,
அண்டை நாடான வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா (80), இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 13-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சிறப்பு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தது. இருப்பினும் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், கவலைக்கிடமாக இருப்பதாகவும் டாக்டர்கள் நேற்று தெரிவித்தனர்.
இந்த நிலையில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலிதா ஜியா சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். வயது (80). அவரது மரணத்தை வங்கதேச தேசியவாத கட்சி அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது. கலிதா ஜியா மறைவால் அவரது கட்சித் தொண்டர்களும், மக்களும் மிகுந்த சோகத்தில் உள்ளனர். கலிதா ஜியா மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த ஆண்டு வங்கதேசத்தில் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், கலிதா ஜியாவின் மறைவு அக்கட்சிக்குப் பின்னடைவாக கருதப்படுகிறது. கலிதா ஜியா கடந்த 1991-96 மற்றும் 2001-06 என இரு முறை வங்காளதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.






