

வாஷிங்டன்,
எந்த ஆவணங்களும் இல்லாமல் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 8 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு முந்தைய ஒபாமா அரசு பொது மன்னிப்பு வழங்கியது. அவர்களுக்கு பணி அனுமதியும் அளித்தது. சிறுவர்கள் என்பதால், அவர்கள் மீதான நடவடிக்கையை தாமதப்படுத்தும் நோக்கத்தில், இந்த மன்னிப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த பொது மன்னிப்பை தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று ரத்து செய்து உத்தரவிட்டார். இதனால், எந்த ஆவணங்களும் இல்லாமல் பணியாற்றி வரும் 8 லட்சம் பேரின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது.
இவர்களில், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களும் இந்த முடிவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கிடையே, டிரம்பின் நடவடிக்கையை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. வெள்ளை மாளிகை முன்பு திரண்ட நூற்றுக்கணக்கானோர் டிரம்புக்கு எதிராக கோஷமிட்டனர். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் டிரம்பின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார்.டிரம்பின் இந்த முடிவு மிகவும் கொடூரமானது மற்றும் இரக்கமற்றது என ஒபாமா கடுமையாக விமர்சனம் செய்தார்.