பெய்ஜிங்கில் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை: தொற்று பாதிப்பு குறைந்ததால் சீன அதிகாரிகள் முடிவு

கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததால் சீன தலைநகர் பெய்ஜிங்கில் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
பெய்ஜிங்கில் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை: தொற்று பாதிப்பு குறைந்ததால் சீன அதிகாரிகள் முடிவு
Published on

பெய்ஜிங்,

தற்போது உலக நாடுகளை உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் தான் தோன்றியது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

இதையடுத்து, ஹூபெய் மகாணத்தை முழுமையாக முடக்கிய சீனா, தொற்று பரவலை சில மாதங்களில் கட்டுக்குள் கொண்டு வந்தது. எனினும், வெளி நாடுகளில் இருந்து தாயகம் திரும்புபவர்களால் மீண்டும் உள்ளூரில் தொற்று ஏற்படுவதாக சீனா கூறி வந்தது. இதனால், சீனாவில் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், கடந்த இருவாரங்களாக சீன தலைநகர் பெய்ஜிங்கில் புதிதாக தொற்று பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை. இதையடுத்து, கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளை சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் படிப்படியாக தளர்த்தி வருகின்றனர். அதன் ஒருபடியாக, வெளியிடங்களுக்கு பொதுமக்கள் செல்லும் போது முகக்கவசம் அணிதல் கட்டாயம் இல்லை என்று பெய்ஜிங் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2-வது முறையாக மாஸ்க் அணிவதில் இருந்து கட்டுப்பாடுகளை சீனா தளர்த்தியுள்ளது. ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் மாஸ்க் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. எனினும், தொற்று பரவல் மீண்டும் ஏற்பட்டதால் ஜூன் மாதம் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று பெய்ஜிங் நகர அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், சீனாவில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. சீன நாட்டவர்கள் மட்டும் வர சிறப்பு விமானம் அனுமதிக்கப்படுகிறது. சீனாவில் நேற்று வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம் 20-பேருக்கு தொற்று உறுதி செய்யபட்டது. சீனாவில் இதுவரை 84,917- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com