

பெய்ஜிங்,
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டி கடந்த பிப்ரவரி 4-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. அதனை தொடர்ந்து 2022 குளிர்கால பாராலிம்பிக் போட்டி மார்ச் 4-ந் தேதி(நேற்று) தொடங்கி வருகின்ற 13-ந் தேதி வரை நடைபெறுகின்றன.
தற்போது உக்ரைன்-ரஷியா இடையே போர் நடைபெற்று வரும் சூழலில், ரஷியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளின் விளையாட்டு வீரர்கள் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாக சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி அறிவித்தது. உக்ரைன் மீதான ரஷியா மற்றும் பெலாரஸ் படைகளின் தாக்குதலை தொடர்ந்து, ரஷியாவின் மீது சர்வதேச அமைப்புகள் விதித்துள்ள தடை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 2022 குளிர்கால பாராலிம்பிக் துவக்க விழா சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள பறவைக்கூடு மைதானத்தில் (Bird's Nest Stadium) நடைபெற்றது. இதன் துவக்க விழா அணிவகுப்பில் ரஷியா மற்றும் பெலாரஸ் வீரர்கள் கலந்து கொள்ளவில்லை. அதே சமயம் உக்ரைன் நாட்டின் பாராலிம்பிக் வீரர்களுக்கு சீனா சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் கண்கவர் வானவேடிக்கைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.