

ஐதராபாத்,
கொரோனாவுக்கு எதிராக முற்றிலும் உள்நாட்டில் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படுவது கோவேக்சின் தடுப்பூசி ஆகும். இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கி, இந்தியாவில் புனே சீரம் நிறுவனம் தயாரித்து வழங்குவது கோவிஷீல்டு தடுப்பூசி ஆகும்.
இவ்விரு தடுப்பூசிகளில் கோவேக்சினை முதல் டோசாகவும், கோவிஷீல்டை இரண்டாவது டோசாகவும் அல்லது கோவிஷீல்டை முதல் டோசாகவும், கோவேக்சினை இரண்டாவது டோசாகவும் போட்டுக்கொண்டால் 4 மடங்கு நோய் எதிர்ப்புச்சக்தி கிடைப்பது ஆசியா ஹெல்த்கேர் பவுண்டேசன் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கலப்பு தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கண்டறிய இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மேற்கண்ட இரு தடுப்பூசிகளையும் இரு டோஸ்களாக செலுத்திக்கொள்கிறபோது, கொரோனா வைரசின் ஸ்பைக் புரதத்தை அழிக்கிற நோய் எதிர்ப்புச்சக்தி அதிகமாக உருவாவது இந்த ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பாக அமைந்திருப்பதாக ஆசியா ஹெல்த்கேர் பவுண்டேசனின் ஏ.ஐ.ஜி. ஆஸ்பத்திரியின் தலைவர் டி.நாகேஷ்வர் ரெட்டி தெரிவித்தார்.