

காபூல்,
ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் மாகாணத்தின் வடகிழக்கில் சாலையோரம் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு ஒன்று நேற்று மாலை வெடித்ததில் வாகனம் தாக்குதலுக்கு உள்ளானது.
அந்த வாகனத்தில் திருமணத்திற்கு சென்று கொண்டிருந்த 6 பெண்கள், 6 சிறுமிகள் மற்றும் 2 குழந்தைகள் மற்றும் ஆண் ஓட்டுனர் ஒருவர் என 15 பேர் கொல்லப்பட்டனர். 2 பேர் காயமடைந்தனர்.
சில மணிநேரம் கழித்து சோதனை சாவடி ஒன்றில் வெடிகுண்டுகளை ஏற்றி வந்த வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது. அதில் இருந்த பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததில் காவலர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்த இரு தாக்குதல்களையும் தலீபான் பயங்கரவாதிகள் நடத்தி உள்ளனர் என அந்நாட்டு உள்நாட்டு அமைச்சகம் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது. எனினும் இதற்கு அந்த அமைப்பு பொறுப்பேற்கவில்லை.
ஆப்கானிஸ்தானில் நாள்தோறும் அந்நாட்டு படைகள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர்.