

பீஜிங்,
உக்ரைன் நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என சீனா கருத்து தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கனுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின்போது சீன வெளியுறவு மந்திரி வாங் யி இதனை தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உக்ரைன் பிரச்சினை சிக்கலானது, இது சர்வதேச உறவுகளின் அடிப்படை விதிமுறைகளைப் பற்றியது மட்டுமல்லாமல், பல்வேறு தரப்பினரின் பாதுகாப்பு நலன்களுடன் நெருக்கமாக தொடர்புடையது. தற்போதைய நெருக்கடியைத் தீர்ப்பது மட்டுமல்லாமல், பிராந்தியத்தின் நீண்டகால ஸ்திரத்தன்மையைப் பேணுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
மோதல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் எந்தவொரு நகர்வையும் சீனா எதிர்க்கிறது. உக்ரைன் நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும். நிலைமையை தணிக்கவும், அரசியல் தீர்வுக்காகவும் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் சீனா ஆதரிக்கிறது என்று அவர் கூறினார்.