

வாஷிங்டன்,
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்திற்கு அருகே உள்ள பெரிங் கடலில்(Bering Sea), 15 வயது சிறுவன் தனது உறவினர்களுடன் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றான். ஆனால் அவர்கள் சென்ற படகு எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் சிறுவனுடன் சென்ற 2 உறவினர்களும் உயிரிழந்த நிலையில், நடுக்கடலில் சிறுவன் படகின் உடைந்த பாகத்தை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடி உள்ளான். மறுபுறம் கடலில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் அமெரிக்க கடலோர காவல் படையினர் ஈடுபட்டனர்.
இந்நிலையில், 2 நாளாக நடுக்கடலில் உயிருக்கு போராடி வந்த சிறுவனை அமெரிக்க கடலோர காவல் படை பத்திரமாக மீட்டுள்ளது. சிறுவனுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சிறுவனின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.