

காபூல்,
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலைநகர் காபூலில் மக்ரோரேயன் இ சார் பகுதியில் இன்று அரசுக்கு சொந்தமுடைய மத்திய வங்கியின் வாகனம் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது.
அதன் மீது திடீரென சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில் அந்த வாகனம் வெடித்து சிதறியது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் வங்கியில் பணியாற்றிய ஊழியர்கள் ஆவர்.
அவர்களில் அந்நாட்டில் இருந்து வெளிவரும் டோலோ நியூஸ் என்ற செய்தி நிறுவனத்தில் பணியாற்றிய யாமா சியாவாஷ் என்ற முன்னாள் செய்தி வாசிப்பாளரும் ஒருவர். மற்றவர்களில் அகமதுல்லா அனாஸ் என்பவர் வங்கியில் துணை செயல் அதிகாரியாகவும், ஆமின் என்பவர் வாகன ஓட்டுனராகவும் இருந்துள்ளனர்.
காபூல் பல்கலைக்கழகத்தில் சில நாட்களுக்கு முன் துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் திடீரென மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. தலீபான் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.