

புதுடெல்லி,
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் பேசியதாவது:- மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவ பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடன் இணைந்து சீனா செயல்படும். இதில் பிரிக்ஸ் ஒத்துழைப்பு சீராக முன்னோக்கிச் செல்வதை உறுதி செய்ய வேண்டும். மேற்கு ஆசியாவில் அமைதியைக் கொண்டு வருவதில் இந்தக் கூட்டமைப்பு தனது உரிய பங்கை ஆற்ற வேண்டும்.
பிரிக்ஸ் நாடுகள் பனிப்போர் மனப்பான்மையை எதிர்க்க வேண்டும். பிற நாடுகளின் இறையாண்மை மீறல்களையும் அவற்றின் உள் விவகாரங்களில் தலையிடுவதையும் உறுப்பு நாடுகள் எதிர்க்க வேண்டும். உலகளாவிய தெற்கு வேகமாக வலிமை பெற்று வருகிறது. மேலும் பன் முனை உலகத்தை நோக்கிய போக்கு தடுக்க முடியாதது. பதற்றமான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஆக்கப்பூர்வமான பங்கை ஆற்ற வேண்டும்.
மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் அமைதியையும், நிம்மதியையும் கொண்டு வருவதில், சீனா தனது சக பிரிக்ஸ் உறுப்பு நாடுகளு டன் இணைந்து உரிய பங்கை ஆற்றும். அடுத்த ஆண்டு நடைபெறும் 19-வது உச்சிமாநாட்டை சீனா நடத்தும். உலக செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு அமைப்பில் பிரிக்ஸ் நாடுகள் தீவிரமாகப் பங்கேற்க வரவேற்கப்படுகின்றன. பிரிக்ஸ் நாடுகள் இணைய வெளி, புறவிண்வெளி மற்றும் ஆழ்கடல் ஆகியவற்றில் உலகளாவிய நிர் வாகத்துக்கு தலைமை தாங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.