உளவாளிக்கு விஷம்; மாஸ்கோ கூட்டத்தில் இங்கிலாந்து தூதர் பங்கேற்கவில்லை என தகவல்

உளவாளிக்கு விஷம் வைக்கப்பட்ட விவகாரத்தில் விளக்கம் அளிக்க ரஷ்யா விடுத்த அழைப்பு கூட்டத்தில் இங்கிலாந்து தூதர் பங்கேற்கவில்லை என இங்கிலாந்து தெரிவித்துள்ளது. #BritishAmbassador
உளவாளிக்கு விஷம்; மாஸ்கோ கூட்டத்தில் இங்கிலாந்து தூதர் பங்கேற்கவில்லை என தகவல்
Published on

மாஸ்கோ,

ரஷ்ய ராணுவத்தின் உளவு பிரிவில் பணிபுரிந்த செர்கெய் ஸ்கிரிபால் ஓய்வு பெற்ற பின் இங்கிலாந்து நாட்டிற்காக உளவு வேலையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து ரஷ்யா அவரை கைது செய்தது. உளவாளிகள் பரிமாற்றம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த 2010ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிடம் இவர் ஒப்படைக்கப்பட்டார்.

அதன்பின் இங்கிலாந்தில் வசித்து வந்த செர்கெய், சாலிஸ்பரி நகரில் கடந்த 4ந்தேதி தனது மகள் யூலியாவுடன் இருந்தபொழுது அடையாளம் தெரியாத விஷபொருள் ஒன்றை இருவரும் முகர்ந்துள்ளனர். இதில் மயக்கமடைந்து அவர்கள் சரிந்து உள்ளனர். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செர்கெய் விவகாரத்தில் ரஷ்ய பின்னணி உள்ளது என்று இங்கிலாந்து குற்றம் சாட்டியது. அந்நாட்டின் பத்திரிக்கைகள் மற்றும் வெளியுறவு துறை மந்திரி ஜான்சன், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஆகியோர் இந்த குற்றச்சாட்டினை கூறினர். இதற்கு அமெரிக்காவும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசியது.

இங்கிலாந்தின் இந்த குற்றச்சாட்டிற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்தது. இதுபற்றி ரஷ்ய அதிபரின் செய்தி தொடர்பு அதிகாரி டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இந்த குற்றச்சாட்டுகளுக்கு முறையான சான்றுகளை கொண்டு நிரூபிக்க வேண்டும். அல்லது இதற்காக இங்கிலாந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார்.

இந்த நிலையில், உளவாளிக்கு விஷம் வைக்கப்பட்ட விவகாரத்தில் விளக்கம் அளிப்பதற்காக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இன்று கூட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதில், இங்கிலாந்து தூதர் கலந்து கொள்ள மாட்டார் என்று மாஸ்கோ நகரில் உள்ள இங்கிலாந்து தூதரக செய்தி தொடர்பு அதிகாரி ஜீனத் காஞ்சே கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு அதிகாரிகள் மட்டத்திலான ஒருவரை அனுப்புவதற்கு தூதரகம் முடிவு செய்துள்ளது என கூறிய அவர் தொடர்ந்து தகவல்கள் அளிப்பதற்கு மறுத்து விட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com