லண்டனில் ராட்சத தண்ணீர் குழாய் சேதம்! சாலைகளில் 4 அடி உயரத்துக்கு பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

லண்டனில் ராட்சத தண்ணீர் குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக தெருக்களில் வெள்ளம் பாய்ந்து ஓடியது.
லண்டனில் ராட்சத தண்ணீர் குழாய் சேதம்! சாலைகளில் 4 அடி உயரத்துக்கு பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்
Published on

லண்டன்,

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத தண்ணீர் குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக தெருக்களில் வெள்ளம் பாய்ந்து ஓடியது.

இஸ்லிங்டன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத தண்ணீர் குழாயில் நேற்று காலை திடீர் வெடிப்பு ஏற்பட்டதால், அங்குள்ள சாலைகளில், கிட்டத்தட்ட நான்கு அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

தகவல் அறிந்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற அவசர சேவை உதவி படையினர் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மக்களை பத்திரமாக மீட்டனர். கிட்டத்தட்ட 70 தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டு மீட்பு பணியை மேற்கொண்டனர்.

இந்த திடீர் வெள்ளத்தால் அங்கு பொருட்சேதம் பெருமளவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

குடிநீர் குழாயில் அடைப்பு சரி செய்யப்பட்ட பின் நீர்வரத்து குறைந்தது. எனினும் இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

தீயணைப்பு வீரர்கள் தடுப்புகளை ஏற்படுத்தி நீர் வரத்தை கட்டுப்படுத்தினர். பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இந்த சம்பவம் நேற்று காலை நடந்துள்ளது.

சம்பவத்தை குறித்து இஸ்லிங்டன் பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறியதாவது, "நான் காலை 9 மணிக்கு அலாரத்தை அனைத்து விட்டு, எனது கால்களை படுக்கையில் இருந்து கீழே வைத்த போது ஈரமாக இருந்தது.

வீட்டின் கதவை திறந்தவுடன், "சுனாமி" போல வெள்ள நீர் வீட்டிற்குள் புகுந்தது. வீட்டுக்குள் இருந்த ஆவணங்கள், பாஸ்போர்ட் என பல பொருட்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகள் மற்றும் தெருவில் முட்டளவு உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மிகுந்த சிரமத்திற்கு ஆளானோம்" என்று கூறினார்.

மேலும் மீட்பு படையினரின் துரித நடவடிக்கையால் பிற்பகல் அங்கு நிலைமை சீரானதாக தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com