

நியூயார்க்,
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் காஸில் பீக் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் 15 பேர் சிக்கி கொண்டனர். எனினும், பனிக்கட்டிகளுக்கும், பனிச்சரிவுகளுக்கும் மத்தியில் அவர்கள் தவித்து வந்தனர்.
அவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். இதில் மீட்கப்பட்ட 6 பேரில், 2 பேர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனை நிவாடா கவுன்டியின் செய்தி தொடர்பாளர் ஆஷ்லே குவாத்ரோஸ் தெரிவித்து உள்ளார்.
எனினும், காணாமல் போன மீதமுள்ள 9 பேரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், சக்தி வாய்ந்த பனிப்புயல் தாக்கமும் அந்த பகுதியில் காணப்படுகிறது.
இதனால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே பல மணிநேர போராட்டத்திற்கு பின்னரே 6 பேர் மீட்கப்பட்டனர். இதனை தொடர்ந்து மீதமுள்ளவர்களை மீட்கும் பணியும் பாதிக்கப்பட்டு உள்ளது.