விமான விபத்தில் பலியான மலாவி துணை அதிபரின் உடல் சொந்த கிராமத்தில் அடக்கம்

மலாவி துணை அதிபர் சவுலோஸ் சிலிமாவின் இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விமான விபத்தில் பலியான மலாவி துணை அதிபரின் உடல் சொந்த கிராமத்தில் அடக்கம்
Published on

லிலோங்வே,

ஆப்பிரிக்க நாடான மலாவியின் துணை அதிபர் சவுலோஸ் சிலிமா. கடந்த 10-ந் தேதி அவர் தனது குடும்பத்தினருடன் தலைநகர் லிலோங்வேயில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டார்.முசுசூ நகரில் அந்த விமானம் தரையிறங்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அங்கு மோசமான வானிலை நிலவியதால் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே தலைநகர் லிலோங்வேக்கு திரும்பும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

ஆனால் அந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. எனவே மாயமான விமானத்தை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் உதவியுடன் தேடும் பணி நடைபெற்றது. இதில் அங்குள்ள சிகன்காவா மலைப்பகுதியில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த விபத்தில் துணை அதிபர் சவுலோஸ், அவரது குடும்பத்தினர் உள்பட 10 பேர் பலியாகினர். இதனையடுத்து சொந்த ஊரான சைப்பே நகரில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது. இந்த இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் அவரது உறவினர்கள், நண்பர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இறுதிச்சடங்குகள் முடிந்த பிறகு சொந்த ஊரில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே, விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று மலாவி அதிபர் லாசரஸ் சக்வேரா கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com