

தெஹ்ரான்
ஏமன் அருகே செங்கடலில் சரக்கு கப்பல் மீது கடுமையான தாக்குதல் நடந்துள்ளது.
கடல் வர்த்தக பாதையாக உள்ள செங்கடல் பகுதியில் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சோமாலிய கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் தொடர்ந்து நிலவுகிறது. சமீபத்தில் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது அதிகரித்து காணப்படுகின்றன. இதனால், இந்த பகுதியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து கடும் சவாலாக மாறியுள்ளது.
இந்த சூழ்நிலையில், செங்கடலில் சென்று கொண்டிருந்த ஒரு வர்த்தக சரக்கு கப்பலை இலக்காக கொண்டு ஆயுதங்களுடன் சூழ்ந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று திடீரென அதிரடி தாக்குதலை நடத்தியது.
அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அதனால், கப்பலில் இருந்த ஆயுதமேந்திய பாதுகாவலர்கள் பதிலுக்கு தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டனர். உலக அளவில் பரபரப்பாக இயங்க கூடிய கடல்வழி பகுதியில் ஏற்பட்ட இந்த தாக்குதலால் நடுக்கடலில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு உடனடியாக எந்த குழுவும் பொறுப்பேற்க முன்வரவில்லை.
கடந்த 1-ந்தேதி ஏமன் துறைமுக நகரான பால்காபில் இருந்து தென்கிழக்கே கடலில் சென்ற கப்பல் மீது சோமாலிய கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த கப்பல் லேசான சேதம் அடைந்தது. இதனால் தற்போது நடந்துள்ள தாக்குதல் பின்னணியில் அவர்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனினும், 2023-ம் ஆண்டு இறுதியில் இருந்து செங்கடல் பகுதியில், ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.