

தாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள ஆழமான தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23-ம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும், அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். 9 நாள் போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் இருக்கும் இடம் தெரியவந்தது, இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளின் உதவியுடன் ஆபத்தான மீட்பு நடவடிக்கையின் மூலம் சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.
தற்போது மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பான காணொளி காட்சிகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தாய்லாந்து பிரதமர் பிரயட் சான்-ஓ-சா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
12 மாணவர்கள் மீட்கப்பட்ட குகை இனி விரைவில் மியூசியமாக மாற்றப்படும். பயணிகள் அனைவருக்கும் எப்படி மாணவர்கள் காப்பாற்றப்பட்டனர் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் வெளியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அனைவரையும் கண்காணிக்கும் விதமாக இனி பாதுகாப்பு அதிகாரிகள் குவிக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சிறுவர்களை குகையிலிருந்து மீட்கும்பணி நடைபெறும்பொழுதே ஹாலிவுட் படக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததும், இதுதொடர்பான படத்தை அமெரிக்காவை சேர்ந்த பியூர் பிலிக்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக, தயாரிப்பாளர்கள் மைக்கேல் ஸ்காட், ஆடம் ஸ்மித் செய்தியாளர்களிடம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.