சூடானுடனான எல்லையை மூடிய சாட் நாடு

ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சாட்.
சூடானுடனான எல்லையை மூடிய சாட் நாடு
Published on

நிஜாமினா,

ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சாட். இந்நாட்டின் அருகே சூடான் அமைந்துள்ளது. சூடானில்ல் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார்.

அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை ராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவு படையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால், ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி முதல் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. துணை ராணுவம் கட்டுப்பாட்டில் இருந்த தலைநகர் கார்டூமினை கடந்த மார்ச் மாதம் ராணுவம் கைப்பற்றியது. அதேவேளை, ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலில் அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், சூடானின் டார்புர் மாகாணம் டினா நகரில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. டினா நகரம் சூடானின் அண்டை நாடான சாட் நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது. இதனால், மோதலின்போது துணை ராணுவத்தினர் சாட் நாட்டிற்குள் நுழைந்து வருகின்றனர்.

மேலும், ஆயிரக்கணக்கான மக்களும் சூடானில் இருந்து சாட் நாட்டிற்குள் நுழைய முயன்று வருகின்றனர். இதனால், சூடான் உடனான எல்லையை சாட் நாடு மூடியுள்ளது. சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரை சாட் நாட்டிலும் பரப்ப முயற்சி நடைபெறுவதாகவும், அதை தடுக்கவே எல்லை மூடப்படுவதாக சாட் அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com