ஆன்லைனில் வாங்கிய லாக்கரில் குழந்தைகள் சடலம் அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்

ஆன்லைன் மூலம் ஏலம் எடுத்த லாக்கரில் இருந்த சூட்கேசில் இரண்டு குழந்தைகளின் சடலம் இருந்துள்ளது.
ஆன்லைனில் வாங்கிய லாக்கரில் குழந்தைகள் சடலம் அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்
Published on

வெலிங்டன்,

நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரத்தை சேர்ந்த ஒரு குடும்பம் ஆன்லைன் மூலம் லாக்கர் ஒன்றை கடந்த வாரம் ஏலம் எடுத்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் லாக்கரை சென்று பார்த்துள்ளனர். அப்போது லாக்கரில் இருந்த சூட்கேசில் இரண்டு குழந்தைகளின் சடலம் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், உயிரிழந்த குழந்தைகள் 10 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்த குழந்தைகளின் உடல்கள் பல ஆண்டுகளாக சூட்கேஸ்களில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த குழந்தைகள் யார் என இதுவரை அடையாளம் காணப்பட வில்லை. அவர்கள் குடும்பம் நியூசிலாந்தில் இருக்கலாம். குழந்தைகள் உயிரிழந்தது குறித்து அவர்களின் குடும்பத்தினருக்கு தெரியாமல் கூட இருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

மேலும், ஆன்லைன் மூலம் ஏலம் எடுத்த குடும்பத்தினருக்கும் இந்த சம்பவத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.குழந்தைகள் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து போலீசார் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com