சிலி: காட்டுத்தீக்கு 18 பேர் பலி; அவசரநிலை அறிவிப்பு

அர்ஜென்டினா நாட்டில் தெற்கு படகோனியா பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் வன பகுதிகள் காட்டுத்தீயில் சிக்கி எரிந்து விட்டன.
சான்டியாகோ,
சிலி நாட்டில் காட்டுத்தீ பரவி வருகிறது. இதில், மக்களுடன் காடுகள், கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதுவரை காட்டுத்தீயில் சிக்கி 18 பேர் பலியாகி உள்ளனர். இதனை தொடர்ந்து அந்நாட்டு ஜனாதிபதி கேப்ரியல் போரிக் அவசரநிலையை அறிவித்து உள்ளார்.
சிலியின் மத்திய பையோபையோ பகுதி, பக்கத்தில் உள்ள நூபிள் பகுதி என பல இடங்களில் காட்டுத்தீ பரவி உள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான ஏக்கர் வன பகுதிகள் தீயில் எரிந்து போயுள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகளும் எரிந்துள்ளன.
இதனை தொடர்ந்து, 50 ஆயிரம் பேர் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்திருக்க கூடும் என போரிக் அச்சம் தெரிவித்து உள்ளார். மக்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.
ஆனால், காட்டுத்தீ அணைந்து விடும் என நினைத்து பலர், வன பகுதியையொட்டி அமைந்த வீடுகளிலேயே இருக்கின்றனர். இதனால், நிலைமை மோசமடைந்து உள்ளது. அருகே உள்ள அர்ஜென்டினா நாடும் காட்டுத்தீயில் சிக்கி போராடி வருகிறது. சமீப வாரங்களில் தெற்கு படகோனியா பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் வன பகுதிகள் தீயில் எரிந்து விட்டன.






